கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கிலி வேண்டும் என பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜாவிட் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பயிற்சியாளருமான ஜாவிட் மியாண்டட் தனது யூடியூப் சனலில் வெளியிட்ட காணொளிக் காட்சியில் மேலும் கூறியிருப்பதாவது,
கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பொட் பிக்சிங் உள்ளிட்ட எத்தகைய சூதாட்டத்திலும் ஈடுபட்டு அணிக்கோ, நாட்டுக்கோ அவப்பெயர் ஏற்படுத்தும் வீரர்கள் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது. ஸ்பொட் பிக்சிங் கூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஸ்பொட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கைள தூக்கில் போட வேண்டும்.
ஏனெனில் இதுவுரம் ஒருவரை கொலை செய்வது போன்ற குற்றம்தான். எனவே இதற்கான தண்டனை கொலை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படுவது போல் இருக்க வேண்டும். ஸ்பொட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை அளித்து முன்னுதாரணத்தை உருவாக்கினால் எந்தவொரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.
சூதாட்டம் என்பது எங்களது மத கொள்கைக்கு (இஸ்லாம்) எதிரான விடயமாகும். மத போதனைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறு இழைக்கிறது. இது போன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை மீண்டும் விளையாட அனுமதிப்பவர்கள் தங்களது செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபடம் வீரர்கள் தங்களது சொந்த குடும்பத்துக்கோ, பெற்றோருக்கோ கூட உண்மையாக இருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படியிருந்தால் அவர்கள் ஒரு போதும் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். ஆன்மீக ரீதியாக அவர்கள் தெளிவற்றவர்கள். மனிதநேய அடிப்படையில் இது மாதிரியான செயல்பாடுகள் சரியானது கிடையாது. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இது போன்ற ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அதனை பயன்படுத்தி பணம் சாம்பாதிப்பதும், அதன் பிறகு தங்களுக்குரிய செல்வாக்கு மற்றும் தொடர்பை பயன்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்புவதும் எளிதான விடயமாக இருக்கிறது. வீரர்கள் தங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தங்களது திறமையின் மூலம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் பலரும் பிரார்த்திக்கிறார்கள். நாட்டு மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு மன்னிப்பு அளித்து அணியில் மீண்டும் விளையாட அனுமதிப்பது சரியானதா என ஜாவிட் மியாண்டட் கேள்வியெழுப்பியுள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: